வேலாயுதம் பட போட்டோ ஷூட்டுக்காக நேற்று ஜெனிலியா சென்னை வந்தார்


ஐஃபா விழாவுக்காக கொழும்பு செல்ல விமான நிலையத்துக்குள் நுழைந்த ஜெனிலியா, தமிழ்த் திரையுலக தடை பற்றி கேள்விப்பட்டதும் உடனே திரும்பிவிட்டதாக விளக்கம் கூறியுள்ளார்.

இந்த விளக்கத்தை தமிழ் சினிமா நிர்வாகிகளும் ஏற்றுக் கொண்டதால், வேலாயுதம் படப்பிடிப்பில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இலங்கையில் நடந்த சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் ஜெனிலியா பங்கேற்றதாக பரபரப்பான செய்திகள் வெளியாகின. இதனால் கோபம் கொண்ட திரையுல அமைப்புகள், அவர் தற்போது நடித்து வரும் படங்களில் இருந்து நீக்கப்படுவதாக அறிவித்தன.

ஆனால் ஜெனிலியா இலங்கை பட விழாவில் கலந்து கொள்ளவில்லை என்று மறுத்தார். இலங்கை செல்லும் முடிவை கடைசி நேரம் ரத்து செய்ததாக கூறினார். ஆனால் அவர் இலங்கை சென்று, உடனே திரும்பி விட்டதாக கூறப்பட்டது. இதனால் கடுமையாக எச்சரிக்கப்பட்டார் ஜெனிலியா.

இதுகுறித்து நேற்று தென்னிந்திய திரைப்பட நிர்வாகிகளிடம் அவர் விளக்கமளித்துள்ளார். அதில், படக்குழுவினர் தன்னை அழைத்தபோது வருவதற்கு சம்மதம் சொன்னதாகவும், விமான நிலையத்துக்கும் புறப்பட்டுச் சென்றுவிட்டதாகவும், பின்னர் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் மூலம் திரையுலக தடை பற்றி கேள்விப்பட்டு பயணத்தை ரத்து செய்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த விளக்கத்தை ஏற்று, ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிக்கும் வேலாயுதம் படத்தில் விஜய் ஜோடியாக நடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வேலாயுதம் பட போட்டோ ஷூட்டுக்காக நேற்று ஜெனிலியா சென்னை வந்தார். பாலு மகேந்திரா ஸ்டூடியோவில் நடந்த இந்த படப்பிடிப்பில் விஜய்யுடன் சேர்ந்து பங்கேற்றார்.