‎20 ஆயிரம் ரசிகர்கள் முன்னிலையில் வேலாயுதம் படபூஜை!

டைரக்டர் ஜெயம் ராஜா இயக்கத்தில், நடிகர் விஜய் நடிக்கும் வேலாயுதம் படத்தின் பூஜை சென்னையில் 20 ஆயிரம் ரசிகர்கள் முன்னிலையில் பிரமாண்டமாக நடந்தது. ஆஸ்கார் பிலிம்ஸ் சார்பில் தயாரிக்கப்படும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஹன்சிகா மோத்வானி, ஜெனிலியா நடிக்கிறார்கள். விஜய்யின்... தங்கையாக சரண்யா மோகன் நடிக்கிறார். இப்படத்தின் தொடக்க விழா சென்னையில் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் பாண்டிச்சேரியி்ல இருந்து விஜய் ரசிகர்கள் 20 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். முன்னதாக ரசிகர்கள் மெரினாவில் இருந்து ஜோதி ஏந்தி ஊர்வலமாக வந்து விஜய்யிடம் ஜோதியை கொடுத்தனர். விஜய்யின் அப்பா டைரக்டர் சந்திரசேகரன் - ஷோபா சந்திரசேகரன், எடிட்டர் மோகன் - அவரது மனைவி, ஜெயம் ராஜா - அவரது மனைவி தயாரிப்பாளர் ஸ்ரீதர் - அவரது மனைவி ஆகியோர் குத்துவிளக்கேற்றி வைத்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய விஜய், எனக்கு ரசிகர்கள்தான் விஐபி.க்கள். அதனால் இந்த விழாவில் ரசிகர்களை வரவழைத்து படத்‌தை தொடங்கியிருக்கிறோம். எல்லோருக்கும் ஆஸ்கார் விருது ஆசை இருக்கும். ஆஸ்கார் படத்தில் நடிக்கும் ‌ஆசையும் இருக்கும். வேலாயுதம் படத்தின் மூலம் எனக்கு ஆஸ்கார் நிறுவனத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஜெயம் ராஜா ஏராளமான வெற்றிப்படங்களை ‌கொடுத்திருக்கிறார். ‌பெரும்பாலும் அவரது தம்பி ஜெயம் ரவியை வைத்துதான் படம் இயக்குவார். என்னையும் உங்க தம்பியா நினைச்சுக்கோங்கன்னு அவரிடம் சொல்லியிருக்கிறேன். என்ன... நான் அவர் அளவுக்கு கலர் இல்லை. சச்சின் படத்துக்கு பிறகு ஜெனிலியா இந்த படத்தில் என்னுடன் நடிக்கிறார். தெலுங்கு சினிமா பக்கம் போனவரை பிடித்து தமிழுக்கு அழைத்து வந்திருக்கிறோம். இன்னொரு நாயகி ஹன்சிகா மோத்வானியும் ஏராளமான தமிழ் சினிமாக்களில் நடித்திருக்கிறார். அவர் தமிழ் சினிமாவின் ஜூனியர் குஷ்புவாக இருக்கிறார், என்றார்.

‌இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி பேசுகையில், 2011ம் ஆண்டின் மிகப்பெரிய ஹிட் ஆக இந்த படம் இருக்கும். பொதுவாக படத்தை பார்க்கும்போதுதான் சீட் நுனியில் இருப்போம். இந்த படத்தின் கதையை கேட்கும்‌போதே நான் நுனி சீட்டில்தான் இருந்தேன். அவ்வளவு விறுவிறுப்பான கதை, என்றார்.

விழாவின்போது சாதனை நாயகன் என்ற பெயரில் விஜய்யின் வாழ்க்கை வரலாறு அடங்கிய புத்தகம் வெளியிடப்பட்டது.